பாட்னா: பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை கடந்த 7 மாதங்களாக 15 மாணவர்களும், 3 ஆசிரியர்களும், பள்ளி வளாகத்திலேயே பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளியில் நடக்கும் கொடுமையைத் தாங்க முடியாத 14 வயது மாணவி, தனது தந்தையுடன் நேற்று காவல்நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். இதையடுத்த 15 மாணவர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 2 உதவி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்து, பள்ளியில் நேரடி விசாரணை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், பள்ளி தலைமை ஆசிரியர் உதய் குமார் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 குற்றவாளிகளும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், அந்த மாணவியை 5 மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை ஒரு மாணவன் படம்பிடித்துள்ளான். இதனை வெளியே சொன்னால் விடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டிய மாணவர்கள், தொடர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்ததை அடுத்து, அவரும், மேலும் 2 ஆசிரியர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கடந்த 7 மாதகாலமாக மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இது குறித்த பிகாரில் இருந்து வெளியூர் சென்று பணியாற்றி வந்த தனது தந்தையிடம் அம்மாணவி கூறியதை அடுத்து, அவர்கள் பள்ளிக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.