சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை உத்தரவு: நீதிமன்ற ஆவணத்தில் இடம்பெறாததால் குழப்பம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவு எழுத்துப்பூர்வமாக
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்படாமல் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இதனால், அந்த உத்தரவு செல்லுமா? அல்லது செல்லாதா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முறையிட்டனர். அப்போது, அதுகுறித்து விளக்கமளித்த நீதிபதி, வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை அந்த உத்தரவு செல்லும் என்று தெளிவுபடுத்தினார். அதன் பின்னர், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொழிலதிபர்கள் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடமும் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிதம்பரம், தமக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரினார். அதை ஏற்ற நீதிபதி ஏ.கே.பதக், அவரை ஜூலை 3-ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து முதலில் உத்தரவிட்டார். அதன் பின்னர், அந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அந்தத் தடையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பான எழுத்துப்பூர்வமான உத்தரவு வெளியிட்டபோது, அதில் தடை நீட்டிப்பு தொடர்பான தகவல்கள் இடம்பெறாமல் இருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரம் தரப்பினர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகினர். அதை விசாரித்த நீதிபதி பதக், அந்த உத்தரவு செல்லும் என்று விளக்கமளித்தார்.