செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது
செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பதி எஸ்.பி அபிஷேக் மொஹந்தி கூறியதாவது:
திருப்பதி நகர போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் குழு ஒன்று சனிக்கிழமை கர்நாடகத்துக்குச் சென்றது. கனகபுரா நகர பேருந்து நிலையம் அருகில் ஒரு கடத்தல்காரரைக் கைது செய்தது.
விசாரணையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.25 டன் எடை கொண்ட 76 செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஆலையின் உரிமையாளரான அஃப்சர் என்ற அஃப்ரோஸ், திருப்பதி சேஷாசல வனத்தில் இருந்து செம்மரங்களை தொழிலாளர்களின் உதவியுடன் வெட்டி மர அறுக்கும் ஆலைக்கு கொண்டு வந்து பதுக்கி, வெளிநாடுகளுக்கு கடத்தி வருவது தெரிய வந்தது. அஃப்சர் மீது சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. அவரையும் இதில் தொடர்புடைய பலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, திருப்பதியை அடுத்த காஜுலமாண்டியம் பகுதிக்கு அருகில் கடந்த 5ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், தக்காளி ஏற்றிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் தக்காளிப் பழங்களுக்கு இடையே 631.7 கிலோ எடையுள்ள 22 செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அந்த லாரியின் ஓட்டுநரைக் கைது செய்து, அவரிடமிருந்து 22 செம்மரக் கட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் சேலத்தைச் சேர்ந்த குமார் (34) மற்றும் மது (32) என்று போலீஸார் தெரிவித்தனர்.