மகாராஷ்டிரம்: 2 ஆண்டுகளுக்கு பின் பேரவையில் சகன் புஜ்பல்
மகாராஷ்டிரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல்,
மகாராஷ்டிரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல், 2 ஆண்டு இடைவெளிக்கு சட்டப் பேரவை கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்றார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர், மாநிலத்தின் 2-ஆம் தலைநகராக கருதப்படும் நாகபுரியில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவை அலுவல்கள் தொடங்கியபோது, முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல் அவைக்கு வந்தார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட புஜ்பல், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த மே மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பேரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை புஜ்பல் பங்கேற்றார். அப்போது, பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் செயல்பாடுகளை புஜ்பல் விமர்சித்தார். மும்பையில் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனம் தனது மின்விநியோக வர்த்தகத்தை, அதானி நிறுவனத்துக்கு விற்பதற்கு மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்த நடவடிக்கையையும் அவர் கடுமையாக சாடினார்.
மேலும், விவசாயிகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனவும் புஜ்பல் குற்றம்சாட்டினார்.