வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: மத்திய அரசு
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய செயல் திட்டங்களை வகுப்பதற்கு ஆதரவு அளிப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.
பொதுவாக, நீதிமன்றங்களில் நடைபெறும் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணைகளை விடியோ பதிவு செய்வதோ அல்லது ஒலிப்பதிவு செய்வதோ விதிகளுக்குப் புறம்பானதாகும். செல்லிடப்பேசி வாயிலாகக்கூட நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. நாட்டு மக்களின் முதன்மையான நம்பிக்கைச் சின்னமாக விளங்கும் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? விசாரணை நடைமுறைகள் பாரபட்சமின்றி உள்ளனவா? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்படுகிறது.
மேலும், வழக்கு விசாரணை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் அத்தகைய கேமராக்களைப் பொருத்த அனுமதி அளித்தது. அதேவேளையில், உயர் நீதிமன்றங்களிலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை விடியோ பதிவு செய்து நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் ஸ்வப்னில் திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அந்த அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மத்திய அரசு திங்கள்கிழமை பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், விசாரணை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, அதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.