பிகார் காப்பக சிறுமிகள் பாலியல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ
பிகார் மாநிலத்தில் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு ஞாயிற்றுக்கிழமை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிகார் மாநிலத்தில் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு ஞாயிற்றுக்கிழமை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவியுடன் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில், மும்பையைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஆய்வு நடத்தியதில், அங்கு தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காப்பகத்தின் நிர்வாகி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதால், அவரைப் பாதுகாப்பதற்காக, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கை பிகார் மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
அதன்படி, இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த காப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு சிபிஐ விசாரணையை மேற்கொண்டுள்ளது.