முன்னாள் பிரதமரும், பாஜக முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, பாஜக வெளியிட்ட அறிக்கையில் எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கண்காணிப்பின் கீழ் மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தது.
பின்னர், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவரைப் பரிசோதித்து வந்த மருத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதனிடையே, மருத்துவமனைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறுகையில், "வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். வரும் சில நாட்களில் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.