ராஞ்சி: ஆதார் அட்டை இருந்தாலும் குடும்ப அட்டை வழங்கப்படாத காரணத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவர் பட்டினியால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டம் மாண்டு தாலுகாவில் உள்ளது புனந்தரியா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சிந்தமன் மல்ஹர் (40) என்பவர்தான் உண்ண உணவில்லாமல் வியாழன் அன்று உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகனான விதேஷ் கூறியதாவது:
நான் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில்தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்காலிக வசிப்பிடத்திற்கு திரும்பினேன். எனது தந்தை கடந்த சில நாட்களாக எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. விரைவில் துவங்கவுள்ள பருவமழைக் காலத்திற்காக இடத்தை தயார் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.
அதேபோல் மறுநாள் காலை 10 மணி அளவில் நல்ல வெயிலில் எங்கள் கூடாரத்தின் மேல் சாக்குகளை விரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வெயில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தான் தெரிவித்ததற்கு சாட்சியாக கூடாரத்திலிருந்த காலி பாத்திரங்களை காண்பித்த அவர், ஆதார் அட்டை இருந்தாலும் தனது தந்தைக்கு குடுமப அட்டை வழங்கப்படாததை சுட்டிக் காட்டினார்.
அதேசமயம் மாவட்டத்தில் பட்டினிச்சாவுகள் எதுவும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தாலும், சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டர அலுவலர் லலன் குமார், விதேஷ் குடும்பத்திற்கு உணவு தானியங்களும் உடனடி நிவாரணமாக ரூ.5000-ம் வழங்கியுள்ளார்.