இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மிசோரம்-இல் இன்று யோகா தினம் கொண்டாடப்படவில்லை.
யோகா தினம் அனுசரிக்க தொடங்கியதில் இருந்தே இங்கு அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.
அசாம் ரைபில்ஸ் மைதானத்தில் மட்டும் இன்று (வியாழக்கிழமை) அரசு சார்பாக யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், அதிலும் அமைச்சர்களோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ யாரும் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில முதல்வர் லால் தன்ஹாவாலா அவருடைய பேரன் திருமண விழா பணிகளில் இருப்பதால் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாநில ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் தில்லியில் இருப்பதால் யோகா தின சிறப்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று ராஜ்பவன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஊழல் ஒழிப்பு அமைப்பாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய பிரிஸம் கட்சித் தலைவர் கூறுகையில், "எங்களது மாநிலம் கிறிஸ்துவ மாநிலம். யோகா இந்து மதத்தின் ஒரு பகுதியாக நம்புகிறோம். அதனால், அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. யோகா திணிப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் கொண்டாட்டத்தை நாங்கள் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்" என்றார்.
கடந்த ஆண்டு யோகா தின சிறப்பு நிகழ்வை தொடங்கிவைத்து பேசிய அப்போதைய ஆளுநர், "யோகாவை ஒரு மதத்தின் செயலாக நம்புகின்றனர். ஆனால், யோகா எந்த மதத்தையோ, அமைப்பயோ அல்ல சமூகத்தையோ சார்ந்தது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.