திருமண கொண்டாட்டத்தில் துப்பாகியால் சுட்டதில் மாப்பிள்ளை சாவு
தில்லியில் திருமணக் கொண்டாட்ட ஊர்வலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உறவினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு மாப்பிள்ளை மீது பாய்ந்தது.
தில்லியில் திருமணக் கொண்டாட்ட ஊர்வலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உறவினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு மாப்பிள்ளை மீது பாய்ந்தது.
இதில் மாப்பிள்ளை உயிரிழந்தார். மகிழ்ச்சிக்காக சுடப்பட்ட தோட்டா, மாப்பிள்ளையின் உயிரையே பலியாக்கிவிட்ட சம்பவம் திருமண நிகழ்ச்சியல் பங்கேற்ற அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
ஷீலம்புரி பகுதியில் உள்ள கலந்தர் காலனியில் இருந்து ஃபரீதாபாதுக்கு திருமண ஊர்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை தீபக் (23) குதிரையில் ஏறி அமர்ந்து சென்றார். அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த சுட்டுள்ளார். அதில், ஒரு தோட்டா தீபக்கின் தலையில் பாய்ந்தது.
குதிரையில் இருந்து சரிந்து கீழே விழுந்த தீபக்கை, உறவினர்கள் மீட்டு ஜிடிபி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணியளவில் தீபக் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனந்த் விஹார் பேருந்து பணிமனையில் தீபக் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.