உ.பி.: அம்பேத்கர் பெயருடன் தந்தை பெயரும் சேர்ப்பு- சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கடும் எதிர்ப்பு
சட்டமேதை அம்பேத்கரின் பெயரை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று பயன்படுத்த உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராம்ஜி என்பது அம்பேத்கரின் தந்தையின் பெயராகும்.
சட்டமேதை அம்பேத்கரின் பெயரை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று பயன்படுத்த உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராம்ஜி என்பது அம்பேத்கரின் தந்தையின் பெயராகும்.
இதற்கு மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தலித் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் தலித் தலைவரான அம்பேத்கரின் பெயருடன் ராம்ஜி என்ற பெயரை முனைந்து சேர்த்திருப்பதாக அந்த இரு கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
பொதுவாக அரசு ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் பெயர் பீம்ராவ் அம்பேத்கர் என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அம்பேத்கரின் தந்தையின் பெயரை ராம்ஜியை அவரது பெயருக்கு நடுவே சேர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு அண்மையில் முடிவெடுத்தது. அம்பேத்கரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் தந்தையின் பெயரை நடுவில் பயன்படுத்துவது வழக்கம் என்று இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி அரசுப் பயன்பாடு உள்பட மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அம்பேத்கரின் பெயரை 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் முதலே உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் இது தொடர்பாக பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தில் 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என்றுதான் அம்பேத்கர் கையெழுத்திட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் ராம் நாயக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஹிந்தியில் அம்பேத்கர் என்ற பெயரை 'ஆம்பேத்கர்' என்று எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எதிர்ப்பு: உத்தரப் பிரதேச அரசின் இந்த முடிவுக்கு மாநில எதிர்க்கட்சிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சமாஜவாதி மூத்த தலைவர் அனுராக் பதோரியா கூறுகையில், 'உத்தரப் பிரதேசத்தில் தலித் தலைவர் அம்பேத்கரின் பெயரை வைத்து பாஜக அரசியல் நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தலித் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறார்கள்' என்று குற்றம்சாட்டினார். இதேபோல மாநிலத்தின் முக்கியமான தலித் ஆதரவு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும், உத்தரப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜக விளக்கம்: ஆனால், அம்பேத்கரின் பெயரில் ராம்ஜியை சேர்த்ததில் எந்த அரசியலும் இல்லை என்று பாஜக விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா கூறுகையில், 'அம்பேத்கரின் பெயரை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது' என்றார்.