காஷ்மீருக்கு 22% மட்டுமே நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு மீது நிலைக் குழு சாடல்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய பிரதமரின் சிறப்பு நிதித் தொகுப்பிலிருந்து இதுவரை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய பிரதமரின் சிறப்பு நிதித் தொகுப்பிலிருந்து இதுவரை 22 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மாநிலங்களவையில் அக்குழு அண்மையில் தாக்கல் செய்துள்ளது.
மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு, இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மிகவும் மந்தகதியில் செயல்படுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் மேம்பாட்டுக்காக பிரதமரின் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.80,000 கோடி சிறப்புத் தொகுப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதுதொடர்பான செயல்பாடுகளை உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து வந்தது.
இந்நிலையில், அந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசை சாடும் விதமாக பல்வேறு கருத்துகள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: காஷ்மீர் வளர்ச்சிக்கென அறிவிக்கப்பட்ட நிதியில் ரூ.67,046 கோடியை முதல்கட்டமாக ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. ஆனால், கடந்த 12 மாதங்களில் ரூ.17,913 கோடி மட்டுமே அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 22 சதவீதம் மட்டுமே ஓராண்டில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய மந்தமான செயல்பாட்டால் காஷ்மீரின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதைக் கருத்தில் கொண்டு மீதமுள்ள தொகையை விரைந்து விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.