முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் என்கௌன்டர்: இதுவரை 50-ஐ எட்டியது

கடந்த ஆண்டு மார்ச் 20, 2017-ல் இருந்து மாதத்தில் இருந்து இப்போது (மார்ச்25, 2018) வரை ஒரு ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 பேர் என்கௌன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 8 மே, 2018 at 1:05 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:29 PM

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஆண்டு மார்ச் 20, 2017-ல் இருந்து மாதத்தில் இருந்து இப்போது (மார்ச் 25, 2018) வரை ஒரு ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 பேர் என்கௌன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டதாவது:

50 கிரிமினல்கள் என்கௌன்டர் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 390 பேர் காயமடைந்துள்ளனர். 3,435 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களின் காரணமாக 4 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 308 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,478 என்கௌன்டர் சம்பவங்கள் நடைபெற்றன. 

Advertisement

அதிகபட்சமாக மீரட்டில் 569, ரே பரேலியில் 253, ஆக்ராவில் 241, கான்பூரில் 112, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் மட்டும் 51 என்கௌன்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், தேசத்துக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மீது அம்மாநில காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 

இந்த சட்டத்தின் மூலம், காவல்துறை அதிகம் சந்தேகிக்கும் நபரை பிடிவாரன்ட் இன்றி கைது செய்ய முடியும். மேலும் அவர்களுக்கு பெயிலில் வெளிவரவும் இயலாது. கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவும் தேவையில்லை. 

இந்த சட்டத்தின் மூலம் 188 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் கேங்ஸ்டர் சட்டத்தின் அடிப்படையில் 1,455 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,881 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. மேலும் அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அடக்குமுறை ஆட்சியை நடத்தி வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.