பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலாவதாக, மேற்கு வங்கத்துக்குச் செல்லும் அவர், கொல்கத்தாவின் சாந்தி நிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வங்கதேச பவனை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்தியா-வங்கதேசம் இடையேயான கலாசார உறவுகளின் அடையாளமாக அந்த அந்த கட்டடம் விளங்கும்.
மாலையில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்லும் மோடி, சிந்திரி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தொடங்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஹிந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சார்பில் தொடங்கப்படும் சிந்திரி உரம் தயாரிப்புத் திட்டம், கெயில் நிறுவனத்தின் ராஞ்சி நகர எரிவாயு விநியோகத் திட்டம், தேவ்கர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை, தேவ்கர் விமான நிலைய மேம்பாடு, அனல்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
அதைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் மோடி கலந்துரையாடுகிறார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.