முகப்பு
இந்தியா

ராணுவ கேப்டன் மற்றும் அவரது குடும்பத்துக்கு தில்லியில் நேர்ந்த அவலம்

இந்திய ராணுவ கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், தில்லியின் துவாரகா பகுதியில் கடந்த 13ம் தேதி சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 25 மே, 2018 at 3:45 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:38 PM


புது தில்லி: இந்திய ராணுவ கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், தில்லியின் துவாரகா பகுதியில் கடந்த 13ம் தேதி சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புப் படைப் பிரிவில் பணியாற்றும் ராணுவ கேப்டன் விகாஸ் யாதவ், தனது மனைவி, பிள்ளைகள், சகோதரி மற்றும் அவரது கணவருடன் தில்லி துவாரகாவில் உள்ள பொழுதுபோக்கு அரங்கில் உள்ள உணவு விடுதிக்குச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து கேப்டன் விகாஸ் யாதவ் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, இரவு விருந்து முடிந்து நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியே வந்தோம். பொழுதுபோக்கு மாலில் இருந்து எங்கள் கார் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததால், நானும், சகோதரி கணவரும் காரை எடுத்து வரச் சென்றோம். மால் வாசலில் எங்கள் குடும்பத்தினர் நின்றிருந்தனர். அப்போது அங்கே எஸ்யுவி வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து 5 பேர் இறங்கி, எனது மனைவி மற்றும் சகோதரியிடம் தவறாக நடக்க முயன்றார்கள். 

Advertisement

அப்போது நாங்கள் காருடன் அங்கே வந்தோம். பெண்களை காப்பாற்ற முயன்றோம். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன், மதுபான பாட்டிலை வைத்து எனது தலையை தாக்கியதில் எனக்கு காயம் ஏற்பட்டது. எங்களை அடித்து மிரட்டிய அந்த கும்பல், பெண்களை பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டியது.

எங்களது எதிர் தாக்குதல் காரணமாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. அதில் ஒருவன் மட்டும் வாகனத்தில் ஏற முடியாமல் போனதால், அவனை நான் துரத்திச் சென்று பிடித்தேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன் அப்பகுதியைச் சேர்ந்தவன் என்பது விசாரணையில் அடையாளம் காணப்பட்டது. மற்றவர்களும் மே 15ம் தேதி கைது செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ கேப்டனுக்கும், அவரது குடும்பத்துக்கும் தலைநகர் தில்லியில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.