முகப்பு
இந்தியா

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: உத்தரப்பிரதேசத்தில் அரசு வீட்டைக் காலி செய்த அப்பா - மகன் முதல்வர்கள்   

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

லக்னௌ: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது அரசு விதிகளுக்கு முரணானது என்று கூறி இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய மறுப்பு  தெரிவித்தனர். இதே போன்றதொரு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால், வீட்டினைக் காலி செய்ய  இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு இருவரும் கடிதம் எழுதியிருந்தனர்.

ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இருவரும் உச்ச நீதிமன்றத்தினை நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருவரையும் அரசு பங்களாவை விட்டு காலி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தாங்கள் வசிக்கும் அரசு பங்களாவை வியாழனன்று காலி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.