கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 9 மணி நிலவரப்படி 10% வாக்குகள் பதிவாகியுள்ளன.
5 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக் கூட்டணியை எதிர்த்து முக்கிய கட்சியான பாஜக மட்டுமே களத்தில் உள்ளது.
வேட்பாளர்கள்: பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வி.எஸ்.உக்ரப்பா, பாஜக வேட்பாளராக ஜே.சாந்தா; சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக மது பங்காரப்பா, பாஜக வேட்பாளராக பி.ஒய்.ராகவேந்திரா, ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக மஹிமா படேல்; மண்டியா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக சிவராமே கெளடா, பாஜக வேட்பாளராக சித்தராமையா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதேபோல, ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் நியாம கெளடா, பாஜக வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி, பிரஜா பரிவர்த்தன் கட்சி வேட்பாளராக பரசுராம் மகாராஜனவர், இந்திய குடியரசுக் கட்சி (கர்நாடகம்) வேட்பாளராக யமனப்பா குனதள், ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளராக தேர்தலில் இருந்து விலகிய எல்.சந்திரசேகர் (வாக்குச்சீட்டில் இவரது பெயர் இடம்பெற்றிருக்கும்), பூர்வாஞ்சல் மகாபஞ்சாயத்து கட்சி வேட்பாளராக எச்.டி.ரேவண்ணா என மொத்தம் 5 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர்.
சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. 5 தொகுதிகளில் ஆண்கள் 27,21,085, பெண்கள் 27,30,949, மூன்றாம் பாலினத்தவர் 462 என மொத்தமாக 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.
பெல்லாரியில் 1901, சிவமொக்காவில் 2002, மண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் மட்டும் வாக்களிப்பதற்காக 26 வாக்குச்சாவடிகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
9,822 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 8,438 ஒருங்கிணைப்புக் கருவிகள், 8,922 வாக்கு உறுதிச்சீட்டு வழங்கல் கருவிகள் இத் தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
இடைத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பெல்லாரி, சிவமொக்கா, மண்டியா, ஜம்கண்டி, ராமநகரத்தில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். நவம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.