புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்கியது பற்றி...
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இன்று ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 'தெலங்கானா ராஷ்டிரிய சேனா'(டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் 2029 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு மாற்றாக தனது கட்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement
முன்னதாக சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர், தெலங்கானா மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த கவிதா, தந்தை சந்திரசேகர் ராவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார். தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகிய கவிதா, விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று(ஏப். 25) அவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தந்தையின் கட்சி பெயர்
சந்திரசேகர் ராவின் கட்சியின் பெயர் முதலில் 'தெலங்கானா ராஷ்டிரிய சமிதி'(டிஆர்எஸ்) என்று இருந்தது. பின்னர் இந்தியா முழுவதும் கட்சியை கொண்டுசெல்லும்பொருட்டு அவர் தனது கட்சியை 'பாரத ராஷ்ட்ரிய சமிதி'(பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றினார்.
தற்போது கவிதா, தனது தந்தை தொடங்கிய கட்சியின் பெயரிலேயே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தந்தையின் 'தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (டிஆர்எஸ்) க்குப் பதிலாக 'தெலங்கானா ராஷ்டிரிய சேனா' (டிஆர்எஸ்) என்று பெயரை அறிவித்துள்ளார்.