தஜிகிஸ்தான் வளர்ச்சிக்கு ரூ.148 கோடி நிதியுதவி: இந்தியா உறுதி
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா சார்பில் ரூ.148 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா சார்பில் ரூ.148 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக தஜிகிஸ்தான் சென்றடைந்த ராம்நாத் கோவிந்துக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் இமாமொலி ரமோன் உடன் வர, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து வகையான பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிக்க தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்கொள்ள இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டன.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராம்நாத் கோவிந்த் மேலும் கூறியதாவது:
மத்திய ஆசிய பகுதிக்கு இது எனது முதல் பயணமாகும். இப்பகுதியில் இந்தியாவுக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக தஜிகிஸ்தான் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியிலான தொடர்புகள் உள்ளன. ருடாகி, ஆமிர் குஸ்ரோ, பெதில் போன்ற கவிஞர்கள், தத்துவவாதிகளை இந்தியா மற்றும் தஜிகிஸ்தானில் பலரும் அறிந்துள்ளனர்.
மனிதம் மற்றும் சகிப்புத்தன்மையை இரு நாடுகளும் பகிர்ந்துகொண்டதற்கு அவர்களது கலைகள் சிறந்த சாட்சியமாகும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராகவும், அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் தஜிகிஸ்தான் அளித்துவரும் பங்களிப்பை இந்தியா அங்கீகரிக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவும் உறுப்பினராவதற்கு தஜிகிஸ்தான் அளித்த உறுதியான ஆதரவு, இருதரப்பு வியூகம் சார் ஒத்துழைப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தானுடன் தற்போது, அரசியல் உறவுகள், வியூகம் சார் ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலன், கலாசாரம், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், தஜிகிஸ்தான் கோரியதன்படி அந்நாட்டில் 7 கிராமங்களில் சூரிய மின்சக்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
மேலும், தஜிகிஸ்தான் ராணுவத்துக்கு ஆங்கில மொழி ஆய்வகங்கள் இரண்டும் அமைத்துக் கொடுக்கப்படும். இந்தியாவும்-தஜிகிஸ்தானும் ஒருங்கிணைந்து சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்த இயலும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.