ராவண வதத்தின்போது பல உயிர்களை காப்பாற்றி தன் உயிரை இழந்த ராவணன்..!
ராவண வதம் நடைபெறுவதை தண்டவாளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில், நாடகத்துக்காக ராவண வேடம் அணிந்திருந்த தல்பீர் சிங் தன் உயிரை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்
அமிருதசரஸில் ராவண வதம் நடைபெறுவதை தண்டவாளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில், நாடகத்துக்காக ராவண வேடம் அணிந்திருந்த தல்பீர் சிங் தன் உயிரை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
தல்பீர் சிங் என்பவர் ஆண்டுதோறும் ராமலீலாவில் ராவணன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். அதேபோல் இந்த ஆண்டும் அவர் ராவண கதாபாத்திரத்தை ஏற்று வேடம் அணிந்திருந்தார். அவர், அதே வேடத்துடன் பஞ்சாப், அமிருதசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தசரா விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்த கொண்டாட்டத்தில் ராவண வதம் நடைபெறுவதை காண திராளானோர் பங்கேற்றனர். அங்கு நிற்பதற்குக் கூட இடமில்லாததால் பொது மக்கள் சிலர் அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று அதை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
ராவண வதம் நடைபெறும் போது, பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால் அருகில் ஒலித்த வேறு எந்தவித சத்தமும் மக்களுக்கு கேட்கவில்லை. அந்நேரம் பொது மக்கள் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்தது. ஆனால், இதனை ராவண வேடம் அணிந்திருந்த தல்பீர் சிங் மட்டும் ரயில் வருவதை கவனித்திருக்கிறார். உடனடியாக அவர் தண்டவாளத்தை நோக்கி கையசைத்து ஓடிச்சென்று அங்கிருந்தவர்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டார். அந்த ரயில் அருகே வந்து தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதும் வரை அவர் இதனையே தொடர்ந்து செய்துள்ளார். அதன் விளைவாக இந்த சம்பவத்தில் உயிரிழந்த 60 பேருடன் சேர்ந்து அந்த 'ராவண' தல்பீர் சிங்கும் உயிரிழந்தார்.
Advertisement
அங்கு ராவண வதம் நடைபெறும் போதே ஒரு ராவணன் தன் உயிரை இழந்து பல உயிர்களை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தல்பீர் சிங்கின் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.