ஊடுருவல்காரர்கள் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தங்களது மண்ணில் செயல்படும்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தங்களது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இரு ஊடுருவல்காரர்களின் உடலையும் எடுத்துச் செல்லும்படி பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ரஜெளரி மாவட்டம், சுந்தர்பானி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு, பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை தடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் மூண்டது. இந்த மோதலில் ஊடுருவல்காரர்கள் இருவரும், ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுட்டுக் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் உடலை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை உறுதி செய்ய இரு நாட்டு ராணுவ தலைமை அதிகாரிகளும் கடந்த மே 29-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக் கூடாது என இந்தியா அமைதி காத்து வருகிறது. ஆனால், எல்லையில் பயங்கரவாதிகள் பல முறை ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்தது. மே 30-ஆம் தேதியில் இருந்து இதுவரை 7 முறை எல்லை ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது. அதில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.