ரஃபேல் போர் விமான விலைப் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதற்கான விலைப் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதற்கான விலைப் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாணை இன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ரஃபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கான தகவல்களை பொது இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு விமானமும் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்பது தொடர்பான விலைப் பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது கொள்கை முடிவாக இருந்தால் அது குறித்தும் பதில் மனுவில் தெரிவிக்கலாம் என்றும், நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல்களைக் கோருகிறோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.