கேரளாவில் கடும் மழைப் பொழிவு குறித்து ஆகஸ்ட் மாதமே எச்சரிக்கை விடப்பட்டது: மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி
கேரளாவில் கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை ஆகஸ்டில் விடுக்கப்பட்டது என மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
புது தில்லி: கேரளாவில் கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை ஆகஸ்டில் விடுக்கப்பட்டது என மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாகவும், அதன் இணையதளத்தில் ஆகஸ்ட் 9 முதல் 22 வரை பதிவேற்றப்பட்ட வானிலை அறிக்கையில் கேரளத்தில் கனமழை, மிக கனமழைப் பொழிவு குறித்து தெரிவிக்கப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை உயர் அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
Advertisement
"கேரளத்தில் மழைப்பொழிவு தொடர்பான தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் திருவனந்தபுரம் அலுலகத்திலிருந்து விடுக்கப்பட்டன. வழக்கமான நடைமுறையான வானிலை குறித்த எச்சரிக்கைகள் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் நாள்தோறும் வெளியிடப்பட்டது.
இத்துடன் மாவட்டந்தோறும் மழைப்பொழிவு குறித்த முன்னறிவிப்புகள் அந்த இணையதளத்தில் படத்துடன் நாள்தோறும் மூன்றுமுறை பதிவேற்றப்பட்டன. அடுத்த மூன்று மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்புகளும் குறுஞ்செய்தி வழியாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கும், மாநில அவரசர நடவடிக்கைகள் மையத்துக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டன.
கனமழை, பலத்த காற்று குறித்த வானிலை எச்சரிக்கை உள்ளிட்ட 5 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள் கேரளத்தின் தலைமைச் செயலருக்கும், கேரளத்தின் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலருக்கும், மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கும், கப்பற்படை, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டன.
இத்துடன், முதல்வர் தலைமையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுக்கும் அதிக அளவில் மழைப் பொழிவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆகஸ்ட் 9 முதல் 15-ஆம் தேதி வரை அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்பதையும், இதே தகவல் ஆஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்திக் குறிப்புகளும் மின்னஞ்சல் வழியாக மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பப்பட்டன. ஆகஸ்ட் 6 முதல் 8 வரை தடுப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியும், நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ஆம் தேதியும் எச்சரிக்கை விடப்பட்டது. இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை கனமான மழை முதல் மிககனமான மழை குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதுபோல ஆகஸ்ட் 12, 14 ஆகிய தேதிகளில் மிக கனமழை குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டது. கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் ஆக்ஸ்ட் 16-ஆம் தேதி அதிக அளவு கனமழை இருக்கும் என தெரிவிக்கும் எச்சரிக்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடப்பட்டது" என்றார் அவர்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்திய வானிலை மையத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் புகைப்படம்: