ரயில்வே கேன்டீன் ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீதான சம்மன் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ராஞ்சி மற்றும் பூரி ஆகிய நகரங்களில் ரயில்வே கேன்டீன் பராமரிப்பு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் மகனும் பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் ஆதரவாளர்களான பி.சி.குப்தா மற்றும் அவரது மனைவி சர்ளா குப்தா, லாரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 10 பேர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.
எனவே, இவ்வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி உள்ளிட்ட அனைவருக்கும் தில்லி நீதிமன்றம், செப்டம்பர் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இவர்கள் மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தொடர்பாக மேலும் ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் கால அவகாசம் தேவை. எனவே லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி ஆகியோர் மீதான சம்மன் அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சிறப்பு நீதிபதி ஏ.பரத்வாஜ் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
முன்னதாக, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.