கோவா அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கம்: புதியவர்கள் இன்று மாலை பதவியேற்பு
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பனாஜி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவைச் சேர்ந்த பிரான்ஸிஸ் டிசௌஸா, பாண்டுரங் மட்கைகர் ஆகியோரை கோவா அமைச்சரவையில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டிசௌஸா, உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் மட்கைகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி, இவர்களுக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த நிலேஷ் கப்ரால், மிலிந்த் நாயக் ஆகியோர் இன்று மாலை புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.