தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!
தவெக தலைவர் விஜய்யின் சென்னை பெரம்பூர் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் சென்னை பெரம்பூர் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.
நாளை மறுநாள் சென்னை பெரம்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். தொடர்ந்து, கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் சனிக்கிழமை மனு அளித்த நிலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெரம்பூரில் பிரசாரத்துக்கு அனுமதிகோரிய தவெகவின் மனுவில், விஜய்யின் தெருமுனைப் பிரசாரம் அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாகச் சென்று, வில்லிவாக்கத்தில் முடிவடைவதாகக் குறிப்பிட்டிந்தனர்.
தொடர்ந்து, முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரத்தில் சுமார் 3,000 பேர் கூடுவார்கள் என்றும், சுமார் 20 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், முல்லை நகர் சந்திப்பு பகுதியில் 3,000 பேர் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி, அனுமதி கடிதத்தை காவல்துறை நிராகரித்தது.
இதையடுத்து தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து விஜய் புகார் அளித்தார்.
சில உயர் அதிகாரிகளை மாற்ற கோரியும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
The Election Commission has granted permission for Tvk leader Vijay campaign in Chennai's Perambur.