பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!
பெரம்பூரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு எனத் தகவல்..
சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய பெரம்பூர் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் நிகழும் என காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பொதுக்கூட்டம், பிரசாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இன்று காலை இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.