முகப்பு
இந்தியா

ஆதார் அட்டையால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சம்: அருண் ஜேட்லி

ஆதார் எண் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:


புது தில்லி: ஆதார் எண் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதார் எண்ணால் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் உரிய நபர்களை நேரடியாகச் சென்றடைவதோடு அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் எண் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைக் கையாள வகை செய்யும் சட்டப்பிரிவையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனி நபர் அடையாள அட்டை எனும் திட்டம் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கப்படும் வகையிலும் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது இருக்கும் 122 கோடி மக்களில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவோரில் போலியான நபர்களின் பெயரிலோ, பொய்யான தகவல்களைக் கொண்டோ, இல்லாத நபர்களுக்கோ சேவை சென்றடையாது என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.90 ஆயிரம் கோடி பணம் மிச்சமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.