உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல், புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் அந்த பத்திரத்தில் தனது மொத்த சொத்துக்களின் விவரங்களையும் பதிவுசெய்துள்ளார்.
அதில், தனக்கு ரூ. 15.8 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.5 கோடியே 80 லட்சத்து 58 ஆயிரத்து 799 மதிப்புடைய அசையும் சொத்துக்களும், ரூ.10 கோடியே 8 லட்சத்து 18 ஆயிரத்து 284 மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் சொந்தமாக கார் கிடையாது என்றும் குறிப்பிட்டார். குருகிராமத்தில் ரூ. 8,75,70,000 மதிப்பில் இரு வணிக இடங்கள், தங்கை பிரியங்கா உடன் இணைந்து ரூ.1,32,48,284 மதிப்பிலான விவசாய நிலங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பெற்ற ஊதியம், ராயல்டி வருமானம், வாடகை வருமானம், வட்டி மற்றும் பத்திரங்கள் மூலம் 2017-18 நிதியாண்டில் தனது மொத்த வருவாய் ரூ.1,11,85,570 வருவாய் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ரூ.72,01,904 கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ரூ.5 லட்சம் தனது தாயார் சோனியாவிடம் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு வங்கிகளில் ரூ.17,93,693 இருப்பும், ரூ.5,19,44,682 முதலீடுகளும் உள்ளதாக தெரிவித்தார்.
காப்பீடு, தபால்துறை சேமிப்பு ஆகிய திட்டங்களின் மூலம் ரூ.39,89,037 சேமிப்புத் தொகையும், ரூ.2,91,367 மதிப்பிலான 333.300 தங்கம் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்மீது 5 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில் மும்பை, ராஞ்சி, குவாஹட்டி மற்றும் மஹாராஷ்டிரா நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளும், தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கல்வித்தகுதி தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் தொடர்ந்த ஒரு வழக்கும் அடங்கும்.
இதுவே கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது ரூ. 9.4 கோடி தனது மொத்த சொத்தின் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் ராகுல் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.