பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்த் பிரசாரக் களத்தில் முதல்முறையாக இறங்கியுள்ளார். 24 வயதாகும் அந்த இளைஞர் மாயாவதியின் சகோதரர் ஆனந்தின் மகன் ஆவார்.
மாயாவதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதால், அவர் பிரசாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், பகுஜன்-சமாஜவாதி-ஆர்எல்டி மகா கூட்டணி' சார்பில் ஆக்ராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆகாஷ் கலந்து கொண்டார்.
சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜீத் சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆகாஷுக்கும் பிரதான இருக்கை மேடையில் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் முதலில் பேசினார்.
தனது அத்தைக்கு ஆதரவாக பெருமளவில் திரண்டுள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தன்னைவிட மூத்தவர்கள் மேடையில் இருக்கும் நிலையில், தன்னுடைய பேச்சை கவனமுடன் கேட்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேச்சை தொடங்கிய அவர், துண்டுச்சீட்டைப் பார்த்து உரையாற்றி முடித்தார்.