தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 14 கர்நாடக எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கர்நாடக பேரவைத் தலைவர் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவு செல்லாது என்று உத்தரவிடக்கோரி காங்கிரஸ், மஜத தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் 14 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடக பேரவைத் தலைவர் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவு செல்லாது என்று உத்தரவிடக்கோரி காங்கிரஸ், மஜத தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் 14 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 13 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் 3 பேரும் ராஜிநாமா செய்ததையடுத்து, அம்மாநில அரசியல் பரபரப்புக்குள்ளானது. இதன் விளைவாக குமாரசாமி தலைமையிலான 14 மாத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா 4-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் பிர்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஒருவர் என மொத்தம் 17 எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். இதன்பிறகு, எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகு பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
Advertisement
தகுதி நீக்க உத்தரவுகள் வெளியானபோதே, எம்எல்ஏ-க்கள் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏ-க்கள் பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லாது என்று உத்தரவிடக்கோரி எம்எல்ஏ-க்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, தங்களது ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்குமாறு உத்தரவிடக்கோரி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், பேரவைத் தலைவர் எடுக்கும் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.