குவகாத்தி: மனம் உடைந்து போயிருக்கும் அஸ்ஸாம் குடும்பம் ஒன்று, சல்மான் கான் பற்றி துப்பு கொடுத்தால் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால், நீங்கள் நினைப்பது போல சல்மான் கான் ஒன்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் எல்லாம் இல்லை. அது ஒரு அழகிய ஆடு.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் ககோபத்தர் கிராமத்தைச் சேர்ந்த குலாம் மன்சூரி குடும்பத்துக்கு சொந்தமானதுதான் அந்த அழகிய ஆடு.
இந்த ஆடு காணாமல் போன நிலையில், அதனை தேட எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், ஆடு பற்றி ஏதேனும் தகவல் தெரிவித்தால் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நாங்கள் அதனை தபங் சல்மான் கான் என்றுதான் ஆசையோடு அழைப்போம். அதன் செல்லப் பெயர் சோனு. அது எங்கள் குடும்பத்தில் ஒன்றாகவே கலந்து விட்டது. அது எனது சகோதரர் போல. அது சுமார் 40 கிலோ எடையுடன் இருக்கும் என்று குலாம் மன்சூரியின் மகன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். என் பெற்றோர் சாப்பாடு கூட சாப்பிடாமல் மனம் கலங்கி இருக்கிறார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த சோனுவைக் காணாமல் ஏங்கிப் போய்விட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், அந்த சோனுவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.7000 முதல் ரூ.10000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.