முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கலந்துகொள்கிறார் அமித் ஷா

நாட்டின் 73வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட், 2019 at 2:45 PM
பகிர்:

நாட்டின் 73வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள 'லால் சவுக்' என்ற இடத்தில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

காஷ்மீர் விவகாரத்தில் பாஜக தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால், ஏற்கனவே அமித் ஷாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதால், அமித் ஷாவின் இந்தப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக, 1948-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் 1992-ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன், பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் லால் சௌக்கில் தேசியக்கொடியை ஏற்றிய நிகழ்வுகள் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.