முகப்பு
இந்தியா

பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பெலு கான் வழக்கு: 6 பேரும் விடுவிப்பு

ராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்களால் பெலு கான் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்து அல்வார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்தது.

Updated On : 14 ஆகஸ்ட், 2019 at 7:47 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:19 PM


ராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்களால் பெலு கான் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்து அல்வார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்தது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாங்கிய மாடுகளை பெலு கான் தனது வாகனம் மூலம் சொந்த மாநிலமான ஹரியாணாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெய்ப்பூர், தில்லி தேசிய நெடுஞ்சாலை இடையே அல்வார் பகுதியில் பசுவை கடத்திச் செல்வதாக குற்றம்சாட்டி பசுப் பாதுகாவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து, பலத்த காயமடைந்த அவர் இரண்டு நாள் கழித்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று பெலு கான் அடித்துக் கொல்லப்பட்டது. மற்றொன்று, பசுவை சட்டத்துக்குப் புறம்பாக அம்மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்டது.

Advertisement

இதில் பெலு கான் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்த அல்வார் நீதிமன்றம், கடந்த 7-ஆம் தேதி விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சந்தேகத்தின் பலனை அளித்து குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக இந்த 6 பேர் அல்லாமல் மேற்கொண்டு 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றம் நடைபெற்றபோது அந்த 3 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு விசாரணை, சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.