ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
அதாவது ஸ்ரீநகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கர்ப்பிணிகள் பலரும், பிரசவ காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது. பிரசவ வலி வந்ததும் மருத்துவமனைக்கு வர முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு முன்கூட்டியே வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் இருக்கும் நோயாளி ஒருவர் கூறுகையில், இந்த மருத்துவமனைக்கு வருவதற்குள் 10 இடங்களில் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். நல்லவேளை மருத்துவமனைக்கு வந்துவிட்டோம் என்று கூறினார்.
அதே சமயம், பல்வேறு தடைகள் காரணமாக நோய் தாக்கியதுமே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படாமல், உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் உடல்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில், மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நிலைதான் பரிதாபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.