நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகள்.. அரசாங்கம் என்ன செய்யப்போகிறது..?
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்திய சாலைகளில் நேரிடும் விபத்து குறித்த ஆய்வை அண்மையில் வெளியிட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்திய சாலைகளில் நேரிடும் விபத்து குறித்த ஆய்வை அண்மையில் வெளியிட்டது. அதில், 2018-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நிகழும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இது 12 சதவீதமாகும்.
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உலகப் போர் மற்றும் பயங்கரவாத சம்பவங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு நாடும் ராணுவம், காவல் துறை, விமானம், கப்பல், ஆயுதங்கள் மற்றும் இதர ராணுவச் செலவுகளுக்கே பெரிதளவு செலவுகள் செய்கின்றன. அதேசமயம், இது கண்களைக் கவரும் திட்டமாகவும் தெரியவில்லை. அதனால், இந்த விபத்துகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் நிறைய நிதி ஒதுக்குவதில்லை, முக்கியத்துவமும் அளிப்பதில்லை.
இருசக்கர வாகனங்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றன. அவற்றைத் தொடர்ந்து, 4 சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் மற்றும் பாதசாரிகள் அதிகளவில் விபத்தில் உயிரிழக்கின்றனர். இரு சக்கர வாகன விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்பதற்கு ஹெல்மட் அணியாததுதான் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் நிகழும் விபத்துகளில் 67 சதவீதம் வாகனங்களை அதிவேகமாக இயக்கியதனால் ஏற்பட்டது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவிக்கிறது.
மது அருந்துதல், மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், உணவை எடுத்துக்கொள்வது போன்ற கவனச் சிதறல்கள் விபத்துகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதேசமயம் சாலை மின்விளக்குகள், மோசமான சாலைகள் உள்ளிட்டவையும் சில நேரங்களில் விபத்துகளுக்கு காரணங்களாக இருக்கிறது. நாளடைவில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்களும் சில சமயம் விபத்துகளை உண்டாக்குகின்றன.
ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது, சிசிடிவி கேமிரா கண்காணிப்புகள் மற்றும் சரியான திட்டங்கள் மூலம் மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் விபத்துகளைப் பெரிதளவில் தவிர்க்கலாம். 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது வாகனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால், துரிதமாக செயல்பட்டு பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த 20 மீட்டர் தேவைப்படும். அதுவே, 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால், 35 மீட்டர்கள் தேவைப்படும். அதனால், இதுபோன்ற பிரேக்கிங் அமைப்புகளும் சாலைப் பாதுகாப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
போக்குவரத்துக் குற்றத்துக்கான அபராதத் தொகையை சமீபத்தில் உயர்த்தியிருப்பது ஒரு வகையில் விபத்துகளைத் தடுக்க உதவும் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் மந்தமான நிலையே தென்படுகிறது. இன்றைக்கும் சாலைகளில் ஹெல்மட் அணியால் இருசக்கர வாகனங்களை இயக்குவதையும், சீருடை அணிந்த போலீஸாரே ஹெல்மட் அணியாமல் வாகனங்கள் இயக்குவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே, நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தவிர்க்க அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களை வகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.