உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்க முன்வந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, நீதிபதி அருண் மிஸ்ராவுக்கும், வழக்கறிஞர் சங்கரநாராயணன் என்பவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராகேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து வழக்கறிஞர்கள் சங்கத்தில் சார்பில், நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், பல வழக்கறிஞர்கள் நீதிபதி மீது புகார் அளித்துள்ளனர் எனவும், நீதிபதிகள் வழக்கறிஞர்களுடன் பொறுமையான போக்கை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், நீதிமன்றத்தின் கௌரவத்தையும், நம்பிக்கையையும் நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நீதிபதி அருண் மிஸ்ரா, 'எனது நடத்தையால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். நான் அகங்காரத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. எனது நடத்தையால் வேதனையடைந்த ஒவ்வொரு வழக்கறிஞரிடமும் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். எனவே, யாரும் என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் வழக்கறிஞர் சங்கத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாரானவன்' என்று தெரிவித்துள்ளார்.