ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து உத்தரப்பிரதேச போலீஸார் உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மக்கள், முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இதுகுறித்து கூறுகையில், 'ஹைதராபாத் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதுபோன்ற சம்பவம் ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல; நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைவரும் பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து உத்தரப்பிரதேச மாநில போலீஸார் உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேச மற்றும் தில்லி போலீஸார் பெண்களுக்கு எதிரான சூழ்நிலையை மாற்ற வேண்டும்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.