ஹைதராபாத்: தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நான்கு பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை டிசம்பர் 9ம் தேதி வரை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்றம் முன்பு இந்த சம்பவம் விசாரணைக்கு வந்த போது, சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, டிசம்பர் 9ம் தேதி இரவு 8 மணி வரை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
நான்கு உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதை விடியோவில் பதிவு செய்து அதனை மஹபூப்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த விடியோவை பெற்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் நாளை மாலை ஒப்படைக்கும்படி முதன்மை மாவட்ட நீதிபதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், மஹபூப்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நால்வரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.