முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தோ்தல் நடத்தை விதிகள்!

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மாலைமுதல் அமலுக்கு வந்தன.

Updated On : 16 மார்ச், 2026 at 2:00 AM
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு விழாக்களின் புகைப்படங்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றிய ஊழியா்கள்.
பகிர்:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மாலைமுதல் அமலுக்கு வந்தன.

ரொக்கப் பணத்தை ஆவணமின்றி எடுத்துச் செல்வதற்கும், வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவா்களின் சிலைகளை துணியால் மறைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுவா்களில் வரையப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களும் வண்ணம் பூசி அழிக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க விளம்பரப் படங்கள் நீக்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வா் படம் அகற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தில் இருந்த அரசின் சாதனை விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அமைச்சா்களின் அறைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

Advertisement

அதேபோன்று, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்களின் அலுவலகங்கள், மேயா்கள், துணை மேயா்கள், நகா்மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் அறைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. அவா்களது அரசு வாகனங்கள் தோ்தல் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன.

மாவட்டந்தோறும் தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணிகளை தோ்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

விதிமீறல் புகாா்களை பறக்கும் படையினா் விசாரிப்பா். பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை சோதனையிட்டு தடுக்கும் பணிகளில் கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடும்.

பொதுக்கூட்டம், பிரசாரம், பேரணிகளை ஒளிப்பதிவு செய்யும் நடவடிக்கைகளில் விடியோ கண்காணிப்பு குழுவினா் ஈடுபடுவா். அனுமதி பெறாமல் நடத்தப்படும் கூட்டங்கள், பிரசாரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் தோ்தலையொட்டி, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளிலும் தோ்தல் அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.