குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர். அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மற்றும் பிரிவினையை உண்டாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,
"12 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும் குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். இந்தச் சட்டம் காரணமாக வடகிழக்கில் நிலவும் சூழல் தற்போது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருகிறது. இது மிகவும் கடுமையான சூழல். இது இன்னும் பரவுமோ என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் போலீஸாரின் நடவடிக்கை எங்களுக்கு துயரம் அளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் போலீஸார் இரக்கமற்ற முறையில் மாணவர்களைத் தாக்குகின்றனர். போராட்டம் நடத்துவது மாணவர்களின் ஜனநாயக உரிமை.
நீங்கள் அனைவரும் பாஜக அரசைப் பார்த்திருப்பீர்கள். மக்களின் குரல்களை ஒடுக்கிவிட்டு சட்டம் இயற்றுவதில் மோடி அரசுக்கு இரக்கம் இல்லை என்பது தெரிகிறது. ஜனநாயகத்தில் இது மக்களுக்கும், எங்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.