குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்ததற்காக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் பெரும்பாலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராமாபாய் பரிகார் என்பவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.