மம்தா அரசு ஜனநாயகத்தன்மையில்லாத ஒழுக்கமற்ற அரசு: உ.பி., முதல்வர் யோகி
மம்தா பானர்ஜிக்கு ஜனநாயகம் மீதும் அரசமைப்புச் சட்டம் மீதும் நம்பிக்கை இல்லாமல், தனது அரசை ஜனநாயகத்தன்மையில்லாத, ஒழுக்கமற்ற மக்கள் விரோத ஆட்சியாக மாற்றியுள்ளார் என்று யோகி குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு ஜனநாயகம் மீதும் அரசமைப்புச் சட்டம் மீதும் நம்பிக்கை இல்லாமல், தனது அரசை ஜனநாயகத்தன்மையில்லாத, ஒழுக்கமற்ற மக்கள் விரோத ஆட்சியாக மாற்றியுள்ளார் என்று யோகி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தக்ஷின் தினஜ்பூர் மற்றும் உத்தர் தினஜ்பூர் ஆகிய 2 மாவட்ட பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஹெலிகாப்டரை மேற்கு வங்கத்தில் தரையிறக்க அம்மாநில அரசு அனுமதி மறுத்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இந்த கூட்டங்களில் அவர் அலைபேசி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"மேற்கு வங்கத்தின் திரணமூல் அரசு அங்கு வருவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் நான் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் தற்போது உங்களுடன் இணைந்திருக்கிறேன். மேற்கு வங்க அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. இது ஜனநாயகத்தன்மையில்லாத ஒழுக்கமற்ற மக்கள் விரோத அரசு. பாஜகவின் வளர்ச்சி மேற்கு வங்க அரசுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக நாட்டில் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆனால், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படும். தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பார்த்துள்ளோம். மம்தா பானர்ஜிக்கும் அவரது கட்சிக்கும் ஜனநாயகம் மீதும், இந்திய அரசமைப்பின் மீதும் நம்பிக்கையில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிபடுத்துகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி சமயத்தில் நடைபெறும் துர்கா பூஜையை தடுப்பதற்கான நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொண்டது. இறுதியில் கொல்கத்தா நீதிமன்றம் தலையிடவேண்டியதாயிற்று.
திரிணமூல் கட்சியைச் சேர்ந்த குண்டர்களுக்கு எதிராக பாஜக சண்டையிடவேண்டும். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். அதன்மூலம், பாஜக ஆட்சிக்கு வரும்.
பட்ஜெட்டில் விவசாய திட்டம் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். 10 கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கும். 4 கோடி சிறுதொழில்களுக்கு இந்த பட்ஜெட் பாதுகாப்பு உத்தரவாதத்தை அளித்துள்ளது. மேலும், நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஊதியம் பெற்று வாழும் மக்களுக்கு இந்த பட்ஜெட் நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளித்துள்ளது" என்றார்.