விவாகரத்துக்கான காரணத்தில் தொழுநோய் நீக்கம்: சட்ட மசோதா நிறைவேற்றம்
விவாகரத்துக் கோரும் காரணங்களின் பட்டியலில் தொழுநோயை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
புது தில்லி: விவாகரத்துக் கோரும் காரணங்களின் பட்டியலில் தொழுநோயை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கணவன் - மனைவி இடையே விவாகரத்துக் கோர தீராத நோய் மற்றும் மலட்டுத் தன்மை போன்றவை தகுதியாக இருந்தது.
அந்த தீராத நோய் பட்டியலில் இதுவரை தொழுநோய் இருந்தது. ஆனால் தற்போது தொழுநோயைக் குணப்படுத்தலாம் என்பதால், விவாகரத்துக் கோருவதற்கான காரணப் பட்டியலில் இருந்து தொழுநோயை நீக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டதிருத்த மசோதாவைக் கொண்டு வந்தது.
Advertisement
Advertisement
இந்த சட்ட திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனவே, இந்த சட்டதிருத்தம் மூலம் தொழுநோயைக் காரணம் காட்டி கணவரோ, மனைவியோ விவகாரத்துக் கோர முடியாது.
அதே சமயம், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை மாநிலங்களவையில் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படாமல் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.