பயங்கரவாதத்துக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உயிர்த் தியாகம் செய்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏன் இன்னும் அமைதி காத்து வேடிக்கை பார்க்கிறது? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை குறிப்பிட்டு, சுட்டுரையில் அகிலேஷ் திங்கள்கிழமை பதிவிட்டிருந்ததாவது:
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கான 3 நாள் துக்கம் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கப்போகிறது? ஒருபுறம், பயங்கரவாதத்துக்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்யும் செய்திகளை அன்றாடம் கேட்கிறோம்.
மறுபுறம், அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பாஜக அரசியல் தலைவர்கள் சிரித்த முகத்துடன் பங்கேற்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது? என்று அகிலேஷ் அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலில் பலியான உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரரின் இல்லத்துக்கு அகிலேஷ் யாதவ் கடந்த 15-ஆம் தேதி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்