அஸ்ஸாமில் விஷச்சாராயம் குடித்து 140 பேர் உயிரிழந்த சம்பவம் அரசின் அக்கறையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் மற்றும் ஜோர்கட் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல், விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். சிகிச்சைப் பெறுபவர்களில் கணிசமான அளவில் பெண்களும் உள்ளனர்.
இதனிடையே, விஷச் சாராய விற்பனைக்கு காரணமானவர்கள் குறித்து விசாரிக்க அப்பர் அஸ்ஸாம் மண்டல காவல்துறை ஆணையர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல மாநில கலால் துறை அமைச்சர் பரிமள் சுக்லபாத்யாய, தனது துறை அதிகாரிகள் சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஏற்கெனவே கலால் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறந்துபோனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்க முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சோக சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
அஸ்ஸாமில் விஷச்சாராயம் அருந்தி 140 பேர் உயிரிழந்த சம்பவம் அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.