இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமாகியுள்ளார்.
இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சில விடியோக்களையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறியுள்ளது.
மாயமான இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சிம்ஹகுட்டி வர்தமானின் மகனாவார். சிம்ஹகுட்டி வர்தமான் பரம் விஷிஷ்ட் சேவா விருது பெற்றவராவார்.
கமாண்டர் அபிநந்தன்,பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருப்பணமூர் கிராமம் ஆகும். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது இவரது தந்தை சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் வசித்து வருவதாக உறவினர் தெரிவித்தார்.
ஊடகங்களில் பரவிய புகைப்படத்தின் மூலமாகத்தான் நாங்கள் அபிநந்தனை அடையாளம் கண்டுகொண்டோம் என்று அவரது உறவினர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் வசம் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இந்திய விமானி அபிநந்தனை நினைத்து இந்திய மக்கள் பலரும் தங்கள் வீட்டு மகன் சிறைபிடிக்கப்பட்டால் எந்தவிதமான மன வருத்தம் அடைவார்களோ அந்த உணர்வை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே தற்போது கிடைத்திருக்கும் ஒரு தகவலில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், படத்தின் கதாநாயகன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை எடுக்க, இயக்குநர் மணிரத்னம், ராணுவம் தொடர்பான விஷயங்கள் குறித்து அபிநந்தனின் தந்தையிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.