விவாகரத்துக்கான காரணத்தில் தொழுநோய் நீக்கம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
விவாகரத்துக் கோரும் காரணங்களின் பட்டியலில் தொழுநோயை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புது தில்லி: விவாகரத்துக் கோரும் காரணங்களின் பட்டியலில் தொழுநோயை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
விவாகரத்துக் கோர தீராத நோய் மற்றும் மலட்டுத் தன்மை போன்றவை தகுதியாக இருந்தது. அந்த தீராத நோய் பட்டியலில் இதுவரை தொழுநோய் இருந்தது. ஆனால் தற்போது தொழுநோயைக் குணப்படுத்தலாம் என்பதால், விவாகரத்துக் கோருவதற்கான காரணப் பட்டியலில் இருந்து தொழுநோயை நீக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டதிருத்த மசோதாவைக் கொண்டு வந்தது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் பி.பி. சௌத்ரி, தொழுநோய் என்பது முதலில் தீராத நோயாக இருந்ததால், விவாகரத்துக் கோருவதற்கான தகுதிப் பட்டியலில் இருந்தது. தற்போது தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதால், விவாகரத்துக்கான தகுதிப் பட்டியலில் இருந்து தொழுநோயை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மக்களவையில் இன்று ரஃபேல் மற்றும் சிபிஐ தொடர்பான விவகாரங்கள் மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுட்படிருந்த நிலையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.