டேராடூன்: பிரதமர் மோடிதான் 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கர் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பாராட்டியுள்ளார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் அது குறித்த விவாதம் நடந்து வருகிறது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது அரசியல் ரீதியான அறிவிப்பு என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடிதான் 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கர் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாயன்று கூறியுள்ளதாவது:
இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு, அனைத்து தரப்பு வளர்ச்சி நோக்கிய நடவடிக்கை. பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கர். பிரதமர் மோடியே ஏழை பெற்றோரின் மகன் என்பதால், சமூதாயத்தில் அனைத்து தரப்பிலும் உள்ள ஏழைகளை பற்றி சிந்திக்கிறார். பொதுப்பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் தரப்பில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு கேட்கப்பட்டது, ஆனால் தற்போதுதான் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.