புது தில்லி: சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடந்துள்ளார்.
சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி கடந்த வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அலோக் குமார் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்துள்ளார். சிபிஐ இயக்குநர் ஒருவர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவி இழப்பது சிபிஐ வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆனால் தனக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டதை ஏற்காமல் அலோக் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டார்.
அதனையடுத்து சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை, நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதன் இயக்குநராக நாகேஸ்வர ராவ் கடந்த வெள்ளியன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடந்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.